புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்கு இந்தியா பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும்"
புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்காக இந்தியா தனது பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனிடத்தில் உறுதியளித்துள்ளார்.
இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரான சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பிரமுகர்களுக்கான பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.
அரை மணிநேரமாக நடைபெற்ற இச்சந்திப்பின் போது எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், இந்திய வெளிவிவகாரக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாவது,
"புதிய அரசியல் யாப்பு உருவாக்கும் கருமத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இதனை மேலும் இழுத்தடிக்கப்படலாகாது. இந்த விடயம் சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த நடவடிக்கைகளின் அடிப்படையில் மேலும் காலதாமதம் ஏற்படாத வகையில் அரசியலமைப்பு யாப்பின் வரைவானது இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து உடனடியாக அது சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இலங்கை அரசாங்கமானது இந்த நாட்டு மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்தக் கருமத்தினை நிறைவேற்றுவதனை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
இதன்போது இந்திய அரசாங்கத்தினது ஒத்துழைப்பை மீளவும் உறுதி செய்த வெளி விவகார அமைச்சர், இந்த நடவடிக்கைகளை நிறைவுக்குக் கொண்டுவருமுகமாக தமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
Australia
சிறப்புச் செய்திகள்
Post a Comment