சிறுபான்மையினருக்கு குறிப்பாக தமிழினத்துக்கு செய்த அடக்கு முறைகளை துணிந்து நின்று தட்டிக்கேட்ட கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நாவற்காட்டு பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (21/07/2015) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்...
எமது உரிமைகள் பறிக்கப்படும் போது ஓங்கிய குரலாக ஒலித்து தமிழருக்காக குரல் கொடுத்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். கூட்டமைப்பை உடைப்பதற்கு தேசிய ரீதியில் பல சக்திகள் உருவாக்கப்பட்டுள்ளன' என்றார். 'மேலும் த.தே.கூ. தேசிய ரீதியில் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் தமிழருக்காக குரல் கொடுத்து வருகின்றது.
தமிழர்களின் வாக்குகளை பிரிப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவினப்படுத்துவதற்கும் வெற்றிலைக்காரரும் யானைக்காரரும் அவர்களால் ஏவப்பட்ட சுயேட்சைக் குழுக்களும் பரிசுகளுடன் வாக்குக் கேட்டு வருவார்கள்.
அதற்கு தமிழ் மக்கள் சோரம் போகக்கூடாது. இந்தப் பொதுத்தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் முக்கியமானதாக அமையவுள்ளது"என்றார்.