“உண்மையை மறைத்து நல்லிணக்கத்தை ஒருபோதும் அடைய முடியாது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை முழுமையாக அறியவேண்டும். அது வெளிப்படுத்தப்படாதவரை நாட்டில் நல்லிணக்கம் ஏற்படாது”
இவ்வாறு எதிர்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உலக தினத்தை முன்னிட்டு கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
2009ஆம் ஆண்டுக்கு முன்னரும் பின்னரும், பல ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க அவர்களின் நெருங்கிய அன்புக்குரிய உறவுகள் போராடி வருகின்றார்கள். இது சாதாரண விடயமல்ல. மிகப் பாரதூரமான விடயம்.
2009ஆம் ஆண்டுக்கு முன்னரும் பின்னரும், பல ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க அவர்களின் நெருங்கிய அன்புக்குரிய உறவுகள் போராடி வருகின்றார்கள். இது சாதாரண விடயமல்ல. மிகப் பாரதூரமான விடயம்.
தெற்கில் 1989ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல ஆயிரக் கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இந்த நாட்டு மக்கள் அப்போது இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், சில வேளைகளில் 2009ஆம் ஆண்டு நடந்தவை நடக்காமல் விட்டிருக்கக் கூடும்.
தாங்கள் விரும்பியவற்றைச் செய்துவிட்டு சட்டத்தின் முன்னால் செல்ல வேண்டிய தேவையில்லை, எதனையும் செய்து விட்டுத் தப்பிவிடலாம். அதற்குப் பொலிஸ், இராணுவம், அரசு உதவும். எமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்ற நிலை மாற வேண்டும்.
அந்தத் துணிவு அகற்றப்பட வேண்டும். அது இல்லாமல் செய்யப்பட்டால்தான் நாட்டில் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதல் இல்லாமல் போகும்.
நாட்டில் அனைவரும் ஏற்கக் கூடிய அரசமைப்பு உருவாக வேண்டும். அப்போதுதான் நாட்டில் அமைதியாக எல்லோரும் வாழ முடியும்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை நிறுவும் சட்டம் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அந்த அலுவலகம் நிறுவப்பட வேண்டும். சட்டரீதியான செயற்பாடுகள் இடம்பெற வேண்டும். அதனூடாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களில் எல்லோரும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கூறவில்லை. பலர் உயிருடன் இல்லாமல் இருக்கலாம். நிலமை எப்படியாக இருந்தாலும் நாம் உண்மையை அறியாமல் இருக்க முடியாது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது தொடர்பில் உண்மைகளைக் கண்டறிய வேண்டும். இந்தக் கடமையை நிறைவேற்றுவதாக இலங்கை அரசு ஐ.நா.வுக்கு வாக்குறுதி அளித்துள்ளது. இதற்கான சகல நடவடிக்கையும் எடுப்போம் என்று கூறியுள்ளது.
ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. பன்னாட்டுச் சமூகம் இதில் மிகவும் கவனமாக இருக்கின்றது. நாம் பல முனைகளில் போராட வேண்டும் என்று கேட்கின்றேன். நாமும் பல வழிகளிலும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். நாம் அனைவரும் பன்னாட்டுப் பங்களிப்புடன் வெற்றியடைவோம். எமது அனைத்து முயற்சிகளையும் சனநாயக ரீதியில் முன்னெடுக்க வேண்டும் – என்றார்.
Post a Comment